மனமகிழ் குடும்பம் .. நல்லதோர் குடும்பத்தலைவி

இம்மை மறுமையை படைத்தாளும் ரப்புல் ஆலமீனின் திருப்பெயரால்............



ஒரு குடும்பம் சிறப்பாக அமைவதற்கு அந்த குடும்பத்தலைவியின் பங்களிப்பே பெரிதும் காரணமாக இருக்க வேண்டும்.



என்ன தான் ஆணுக்கு பெண் சமம் என்ற கோஷம் விண்ணை முட்டினாலும், இல்லறவியல் என்ற துறைக்குள் அதாவது குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டால் குடும்பத்தின் முதல் நிர்வாகியாக கணவனும் அடுத்த நிர்வாகியாக மனைவியும் என்ற அடிப்படை சித்தாந்தம் தான் இஸ்லாத்தின் நிலைபாடாகும்.




கணவனுக்குரிய இந்த சிறப்பை எந்த அடிப்படையில் இஸ்லாம் வழங்கியுள்ளது என்பதைப் பற்றி அல்லாஹ்வே தனது திருமறையில் சொல்கிறான் பாருங்கள்,



ஆண்கள் பெண்களை நிர்வகிப்பவர்களாக உள்ளனர்;ஏனெனில் அவர்களில் சிலரை (ஆண்களை)சிலரைவிட(பெண்களைவிட)அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான்:இன்னும் (ஆண்களாகிய)அவர்கள் தங்கள்பொருள்களை பெண்களுக்காகச் செலவு செய்கின்றனர்:ஆகவே நல்லொழுக்கமுள்ள பெண்கள்(தங்கள் கணவன்மார்களுக்கு)பணிந்தே நடப்பார்கள்;அல்லாஹ் பாதுகாத்திருப்பதைக் கொண்டு மறைவானதை (தங்கள் கற்பையும்,கணவனின் பொருள்களையும்)பாதுகாத்துக் கொள்வார்கள்......(அத்தியாயம்- 4,வசனம்- 34).



ஒரு கணவன் தனது மனைவியின் நலனுக்காகவே வீட்டை விட்டு வெளியேறி உழைத்து விட்டு களைப்புடன் வீடு வரும்போது அவனுக்கு சுகம் வழங்கும் அற்புத பொக்கிஷமே மனைவி என்பவள்.



அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி)அறிவிக்கிறார்கள்:உலகம் (சிறிது காலம்)சுகம் பெறப்படும் ஒரு பொருளாகும்.அவ்வாறு சுகம் பெறப்படும் உலகப் பொருள்களில் மிகச் சிறந்தது,நல்ல ஸாலிஹான ம்னைவியாவாள்! (நூல்-முஸ்லிம்).



 இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ள விஷயம் என்னவெனில், ஒவ்வொரு கணவனும் தமது மனைவியரிடமிருந்து சுகம் பெறுவதென்பது அவளது அன்பான உபசரிப்பும் கனிவான வார்த்தைகளும் நேசம் கலந்த அரவணைப்பும்தான் என்பதை தெளிவு படுத்துகிறது.



என்னதான் கணவன் மீது சிறு,சிறு கோபமிருந்தாலும் வெளியிலிருந்து எப்போது வீட்டிற்கு வந்தாலும் கணவனை கனிவோடு உபசரிப்பது மனைவியின் கடமையாகும்.



கணவனின் குறிப்பறிந்து நடக்கும் பெண்ணே மிகச் சிறந்தவள் என நபி(ஸல்)கூறியுள்ளார்கள்.



நீ என்ன சொல்வது?நான் என்ன கேட்பது?என்ற தோரனையில் தங்கள் கணவனையே உதாசீனம் படுத்தும் பெண்கள் இந்த ஹதீஸை அவசியம் மனதில் பதிய வேண்டும்.



(மக்களில்)எவரையும் எவருக்காவது ஸஜ்தா(நெற்றியை நிலத்தில் வைத்துப் பணிதல்)செய்யும்படி நான் ஏவுபவனாக இருந்தால்,மனைவியை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யும்படி ஏவியிருப்பேன் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பாளர்:ஹழ்ரத் அபூ ஹுரைரா(ரலி),நூல்-திர்மிதீ).



ஒவ்வொரு வீட்டிலும் கணவன்,மனைவி என்ற வாழ்க்கை சித்தாந்தத்தில் சின்ன,சின்ன மனஸ்தாபங்கள்,கோபங்கள்,ஏமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும்.



குடும்பம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அல்லாஹ்வுக்காக பொறுமையை கடைபிடிக்கும் பெண்களால் தான் அந்த குடும்பத்தில் சந்தோஷத்தை கொடுக்கமுடியும்.



நம்மில் எத்தனையோ வீடுகளில் சின்ன பிரச்சினைக்கு கூட அன்றைய இரவில் கணவன்,மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கோபம் காட்டும் வகையில் தங்களது படுக்கை விரிப்பை தனி தனியாக விரித்துக் கொள்ளும் அவலநிலை உண்டாகிறது.



கணவனே அறியாமையில் பிரிந்து படுத்தாலும் மனைவி அவனை சமாதானப்படுத்தி அவனுடன் சேர்ந்து படுக்கவேண்டுமென்பதே இஸ்லாம் சொல்லும் அறிவுரை .
நன்றி.. இஸ்லாமிக்
அல்லாஹ்  அவர்களுக்கு அருள் புரிவானாக.
மனமகிழ் குடும்பம் .. நல்லதோர் குடும்பத்தலைவி 

Comments